Mon. Oct 7th, 2024

அழகு நிலையப் பெண் மீது தாக்குதல் | ரவுடி உட்பட 4 பேர் கைது | 

அழகு நிலையப் பெண் மீது தாக்குதல் | ரவுடி உட்பட 4 பேர் கைது

ஜூலை , 9 , 2019
அழகு நிலையம் நடத்தி வரும் பெண்ணை,முன் விரோதம் காரணமாக, கத்தியால் தாக்கிய ரவுடி உட்பட நான்கு பேரை,காவல் துறையினர் கைது செய்து,புழல் சிறையில் அடைத்தனர்.

எம்ஜிஆர் நகர் , புகேழந்தி தெருவைச் சேர்ந்தவர் பிருந்தா (வயது 31 ).இவர்,அதே பகுதியில் உள்ள  சூளைபள்ளம் வெங்கட்ராமன் சாலையில், அழகு நிலையம் நடத்தி வருகிறார். பிருந்தாவிற்கு , கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, நண்பராக  திலீபன் (வயது 34) என்பவர் அறிமுகமான நிலையில்,இருவரும்  நெருக்கமாக பழகி வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிருந்தா மற்றும் திலீபன் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, பிருந்தா திலீபனை தவிர்த்து வந்தார். இதனால், ஆத்திரமடைந்த திலீபன், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான ஆர்த்தி வேலு (வயது 32), டிரைவர் கோகுல் (வயது31), ஆனந்த் (வயது30) ஆகிய மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு, நேற்று மதியம் அழகு நிலையம் சென்று, பிருந்தாவிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, தீடீரென பிருந்தாவை சரமாரியாக தாக்கிய கும்பல், அவரை  கத்தியால் வெட்டிவிட்டு, அவரிடமிருந்து 1 1/2 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதில், கன்னத்தில் வெட்டுபட்ட பிருந்தா,  எம்ஜிஆர் நகர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் பிராங்க் ரூபன் மற்றும் போலீசார், திலீபன் மற்றும் அவரது கூட்டாளிகளை நேற்று இரவு கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஆர்த்தி வேலு, காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் மகன் ஆவார். பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளியான, ஆர்த்தி வேலு மீது ஏற்கனவே, எம்ஜிஆர் நகர், குமரன் நகர், திருமுல்லைவாயில் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில்  உள்ளது குறிப்பிடத்தக்கது.

நமது நிருபர்