Mon. Oct 7th, 2024

மசாஜ் செய்வது போல் நடித்துக் கொள்ளை | தலைமறைவான பெண் கைது |

ஜூலை 02-2019

தேனாம்பேட்டை தொழிலதிபரின் வீட்டில், மசாஜ் செய்வது போல் நடித்து, தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தப் பெண்ணை, காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியப் பின், புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

தேனாம்பேட்டை, வீனஸ் காலனி, முதல் தெருவில் வசித்து வரும், தொழிலதிபர் தினேஷ் டால்மியாவின் மனைவி ராதா டால்மியா. இவருக்கு வயது 55. இவரது கணவர், இயற்கை உணவுப்பொருள் கடையை ஆழ்வார் பேட்டையில் நடத்தி வருகிறார். ராதா டால்மியாவிற்கு, நரம்பியல் தொடர்பான பிரச்சினை இருப்பதால், மருத்துவரின் அறிவுறுத்துதலின் பேரில், கடந்த, 15 வருடங்களாக, சௌமியா என்ற பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து மசாஜ் சிகிச்சை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவரது வீட்டில் இருந்த 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள, வைரக் கற்கள் பதித்த கம்மல், மோதிரம், பிரேஸ்லெட் ஆகிய நகைகளை, மசாஜ் சிகிச்சை செய்து வந்தவரான சௌமியா, திருடி விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், ராதா டால்மியா புகார் தெரிவித்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்டு, வழக்குப் பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதோடு, தலைமறைவான சௌமியாவை தேடிவந்தனர்.

இந்நிலையில், சௌமியா, ராதா டால்மியா விட்டைப் போன்று, மசாஜ் செய்வது போல் நடித்து, இன்னும் பல தொழிலதிபர்கள் வீட்டில் தனது கைவரிசையை காட்டியிருக்கிறாரா..? என விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், நீண்ட தேடுதலுக்குப் பின், சௌமியாவை கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின், அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நோயாளிகளுக்கு மசாஜ் செய்வது போல் நடித்து, பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிருபர் – கோகுலன்