Mon. Jul 8th, 2024

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் உணவுத் திருவிழா!

புதுக்கோட்டை லேணாவிளக்கில் அமைந்துள்ள மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கினை வளர்க்கும் பொருட்டு உணவுத் திருவிழாவினை ஏற்பாடு செய்திருந்தது. பள்ளியின் இணைத் தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் இறை வழிப்பாட்டோடு விழா துவங்கியது. பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன் வரவேற்புரை வழங்கினார்.

திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கே.பாபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பள்ளியின் தலைவர் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசினை வழங்கி சிறப்பித்தார்.

பள்ளி இணைத் தலைவர் கடந்த வருடம் உணவுத்திருவிழா வாயிலாக கிடைத்த நிதி எந்த ஆஸ்ரமங்களுக்கு வழங்கப்பட்டது எவ்வாறு ஏழை எளியவர்களுக்கு சென்று சேர்ந்தது என்பது குறித்த அறிக்கையை வாசித்தார்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில்,

இது போன்ற நிகழ்வு இந்த கல்வி நிறுவனங்களில் மட்டுமே, தான் பார்த்ததாகவும் இந்த வயதிலே குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மையை வளர்ப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்றும், பெற்றோர்கள் இது போன்ற காரியங்களில் குழந்தைகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் சுதந்திரமாக செயல்பட விட்டுவிட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் உதவும் மனப்பான்மை குறைந்து வருகிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களிடம் ஒற்றுமையையும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கினையும் வளர்க்கும் விதமாக உள்ளது.

இதுபோன்ற நிகழ்வில் வரும் நிதியை ஆஸ்ரமங்களுக்கு பள்ளி நிர்வாகம் அளித்து வருவது மாணவர்களை சமுகத்தில் சிறந்தவர்களாக மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளதால் வாய்ப்பளிக்கின்ற இந்நிர்வாகத்தின் செயல்கள் பெருமைக்கும் பாராட்டுக்கும் உரியதாகும், சுத்தமான சூழலில் உருவாக்கப்பட்ட
உணவினையும், சத்தான உணவினையும் மாணவர்கள் உண்ண வேண்டும்.

மேலும் மாணவர்களிடம் ஒருவருக்கு ஒருவர் உதவும் மனப்பான்மை வேண்டும் என்று‌உரையாற்றினார். பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி நன்றி கூறினார்.இந்நிகழ்வில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் தங்களது உணவினை சமைத்து விற்பனை செய்தனர்.

உணவுத் திருவிழாவில் மாணவர்களும், பெற்றோர்களும் அறுசுவை உணவினை உண்டு மகிழ்ந்தனர். உணவுப் பொருட்கள் மட்டுமின்றி மாணவர்கள் விளையாடுவதற்கு வசதியாக விளையாட்டு உபகரணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததை மாணவர்கள் பயன்படுத்தி மகிழ்சியடைந்தனர்.

இந்நிகழ்வு சிறப்பாக அமைய அனைத்து ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளர்களும் இணைந்து செயல்பட்டனர். அனைவரின் ஒத்துழைப்பால் விழா இனிதே நிறைவுற்றது.

அமானுல்லா புதுக்கோட்டை