Thu. Dec 19th, 2024

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்!

டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்து, தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் இணைந்து, டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முகாமில் பங்கேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது;

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைஞர்கள், மாணவ, மாணவிகளின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு சிறப்பான திட்டங்களையும், வேலைவாய்ப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சரால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 100 சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டது.

அந்தவகையில் இன்றையதினம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா துவக்கி வைக்கப்பட்டது.

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்துஆலோசனை அளிக்கப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்து ஆணைகள் வழங்கப்படுகிறது.

இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ,டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் பங்கேற்று, தங்களது தகுதிகளுக்கேற்ப பணிநியமங்களை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே இளைஞர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை உரிய முறையில் பெற்று தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா,இணை இயக்குநர் (வேலைவாய்ப்புத்துறை) சந்திரன், ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் மு.ராசி முருகானந்தம், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொது) மோ.மணிகண்டன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) பெ.வேல்முருகன், உதவி திட்ட அலுவலர் கே.தில்லைமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், வட்டாட்சியர் பெரியநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோகுலகிருஷ்ணன், ஆயிஷாராணி, ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலர் உஷாராணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அமானுல்லா புதுக்கோட்டை