Sun. Oct 6th, 2024

காவலர் வீரவணக்க நாள் – புதுக்கோட்டையி்ல் காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி!

காவலர் வீரவணக்க நாளையொட்டி புதுக்கோட்டையி்லுள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் மாவட்டக் காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

காவலர் வீரவணக்க நாளையொட்டி புதுக்கோட்டையி்லுள்ள காவலர் நினைவு சதுக்கத்தில் மாவட்டக் காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு,இறந்த போலீசாருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1959 -ஆம் ஆண்டு 21 -ஆம் தேதி லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர்த் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப்படை போலீஸார் 10 பேர் உயிரிழந்தனர்.

கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த இந்தக் காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும், ஆண்டு தோறும் பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நீத்தார் நினைவு தினம் என்ற காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் காவல்துறையில் கடமையாற்றும் போது தமிழகம் உள்பட நாடு முழுதும் நிகழாண்டில் உயிர் நீத்த 189 காவலர்களுக்கு காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நீத்தார் நினைவு சதுக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே பங்கேற்று மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், துணை கண்காணிப்பாளர்கள் ஜி. ராகவி (டவுன்), காயத்ரி (இலுப்பூர்),அப்துல்ரகுமான்(பொன்னமராவதி), தீபக்ரஜினி செங்குட்டுவன்(ஆலங்குடி), கௌதம் (கோட்டைப்பட்டினம்), செங்குட்டுவன் (கீரனூர்), சோமசுந்தரம் (அறந்தாங்கி), சண்முகசுந்தரம் (ஆயுதப்படை), தனிப்பிரிவு ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர்கள் கோபிநாத், காமராஜ், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மரியசத்தோதிலக்ராஜ், அழகர் மற்றும் புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் மருது, திருக்கோகர்ணம், காவல் ஆய்வாளர் செல்லத்துரை, கணேஷ்நகர் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, இறந்த போலீசாருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.

அமானுல்லா புதுக்கோட்டை