Wed. Jul 3rd, 2024

புதுக்கோட்டையில் முயல்களை வேட்டையாடிய 3 பேர் கைது! வனத்துறையினர் அதிரடி

புதுக்கோட்டை அருகே தரைக்காடுகளில் வாழும் முயல்களை வேட்டையாடிய மூன்று பேர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை வனச்சரகத்தில் வாராப்பூர் கிராமத்திற்கு அருகில் தரைக்காடுகளில் வாழும் முயல்களை வேட்டையாடிய வாராப்பூர் கிராமத்தினை சார்ந்த அருண்,வீரபாண்டியன், உருமைய்யா ஆகிய மூன்று பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் என். சதிஷ், உத்தரவின் படி புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர்
சோ.கணேசலிங்கம் தலைமையில் புதுக்கோட்டை வனக்கோட்டத்தில் புதுக்கோட்டை, கீரனூர், பொன்னமராவதி, திருமயம், அறந்தாங்கி ஆகிய வனச்சரகங்களில் 14.10.2023 இரவு முதல் 15.10.2023 காலை வரை ஒரே நேரத்தில் வனத்துறையினர்
ரோந்துப்பணி மேற்கொண்டனர்.

இதில் புதுக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் எம்.சதாசிவம்,பெருங்களுர் பிரிவு வனவர் பெ.முருகானந்தம், ஆலங்குடி பிரிவு வனவர்
பொ.ரவிச்சந்திரன், புதுக்கோட்டை பிரிவு வனவர் கே. மகேந்திரன், வனக்காப்பாளர் விஆர். செந்தில்நாதன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் ரோந்துப்பணியில்ஈடுபட்டனர்.

ரோந்துப்பணியின் போது புதுக்கோட்டை வனச்சரகத்தில் வாராப்பூர் கிராமத்திற்கு அருகில் தரைக்காடுகளில் வாழும்
முயல்களை வேட்டையாடிய வாராப்பூர் கிராமத்தினை சார்ந்த அருண்,வீரபாண்டியன், உருமைய்யா ஆகிய மூன்று பேரையும் வனப்பணியாளர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து இறந்த நிலையில் ஒரு முயலும்,உயிருடன் ஒரு முயலும், வேட்டைக்கு பயன்படுத்திய டார்ச் லைட், ஒலிஅதிர்வு இயந்திரம் ஆகியவற்றை வனத்துறையினர் கைப்பற்றி வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து வேட்டையாடிய மூன்று நபர்களையும் கைது செய்யப்பட்டது.வன உயிரின (பாதுகாப்பு) சட்டம், 1972 பிரிவு 9, பிரிவு 39 (1), பிரிவு 50, பிரிவு 51-ன்
படி குற்றமாகும்.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களை மாவட்ட வன அலுவலர் கோ.கணேசலிங்கம் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு விரிவான விசாரணை செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இனிவரும் காலங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில்
வாழ்விடமாக கொண்ட நிலத்தில் வாழும் வன உயிரினங்களான மான், முயல்,உடும்பு, மயில், குரங்கு, நட்சத்திர ஆமை, முக்குளிப்பான், கொக்கு, வாத்து, கிளிகள், நாரை, கீறி, எறும்பு தின்னி, கௌதாரி, காடை மற்றும் நீரில் வாழும் வன உயிரினங்களான கடல் பசு, கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பள்ளி, பச்சையாமை ஆகியவற்றினை வேட்டையாடினாலும், வேட்டையாட முற்பட்டாலும், தொல்லை கொடுத்தாலும், உணவு கொடுத்தாலும், வீட்டில் வளர்த்தாலும் அவைகள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும் என்றும் இதுபோன்ற செயல்களில் இனி பொது மக்கள் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

மீறுபவர்கள் மீது வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972-ன் படி சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட வன அலுவலர் கோ.கணேசலிங்கம் தெரிவித்தார்.

அமானுல்லா புதுக்கோட்டை