Mon. Jul 8th, 2024

துணிச்சல் பற்றி நீங்க பேசாதீங்க.. – சட்டப்பேரவையில் எடப்பாடியிடம் முதலமைச்சர் நேருக்கு நேர் கேள்வி!

இன்று சட்டப்பேரவையில் துணிச்சல் பற்றி நீங்க பேசாதீங்க என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியை நேருக்கு நேர் முதலமைச்சர் கேள்வி கேட்டார்.

இன்று கூடிய சட்டப்பேரவையில் காவிரி நீர் பிரச்சினை குறித்து விவாதங்கள் நடைபெற்றது.

அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
காவிரி பிரச்சினை பற்றி நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்று இங்கு எதிர்க்கட்சி சொல்கிறார். நான் பேசியதை நிரூபிக்கவா? இல்லாதது, பொல்லாததையெல்லாம் சொல்லக்கூடாது. ஆதாரம் இருந்தா சொல்லுங்கள். அதுவும் சட்டமன்றத்தில் எதிர்கட்சி இப்படி பேசுவது மரபா? என்று பேசினார்.

இதனையடுத்து, பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திசை திருப்ப வேண்டாம். நமது உரிமைகளை காப்பதற்காக நான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் பேசிவிட்டால் போதுமா? ஏன் நீங்கள் 38 பேர் இருக்கிறீர்களே அவையை ஒத்திவைக்க வேண்டியதுதானே? அப்படி அழுத்தம் கொடுத்தால்தான் அந்த காவிரி நீர் பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும்.

காவிரி மேலாண்மை ஆணையம் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைக்கப்பட்டது. ஆனால், காவிரி பிரச்சினையில் காலதாமதம் செய்த மத்திய அரசு மீது நாங்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். துணிச்சலோடு தொடர்ந்தோம். அந்த துணிச்சல் உங்களிடத்தில் காணவில்லையே. பார்க்க முடியவில்லையே என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரே… துணிச்சலைப் பற்றி நீங்கள் என்னிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய துணிச்சல் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். அதையெல்லம் சொல்லி இந்த சபையின் மரபை மீற வேண்டாம். நாங்கள் பல முறை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருக்கிறோம். அதற்கான ஆதரங்கள் இருக்கிறது என்றார்.