12ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞன்!

கடலூரில் 12ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற மகன் உள்ளார்.
ஜீவா விருத்தாச்சலத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஆனந்த் மின்வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை ஜீவா பள்ளிக்கு செல்வதற்காக பஸுக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ஆனந்த்திடம் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று இருவருக்குள்ளம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் கைகலப்பாக மாறியது.
இதனால், ஆத்திரமடைந்த ஆனந்த், மாணவன் ஜீவாவை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்தவர்கள் ஜீவாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் ஜீவாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமுறைவாக உள்ள ஆனந்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.