Mon. Jul 8th, 2024

சென்னையில் அதிர்ச்சி… – எலெக்ட்ரீசியன் வெட்டிக்கொலை செய்த கொடூர கும்பல்!

சென்னை பெரும்பாக்கத்தில் எலெக்ட்ரீசியன் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் ராஜா (39). இவர் எலக்ட்ரீஷனாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு வேலை முடித்துவிட்டு தன் இருசக்கர வாகனத்தில் ராஜா வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார். அப்போது, எழில் நகர் வழியாக வந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் ராஜாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.

இதனால், ராஜாவிற்கும், அந்த கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது, போதையில் இருந்த 5 பேர் கத்தியால் ராஜாவை வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த கும்பலை விரட்டிச் சென்றனர். இந்த கும்பலில் கோபி என்பவரை மக்கள் பிடித்தனர்.

இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்குப் போராடிய ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் ராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ரவுடி கோபி (24), சத்யா(30). மகபூல்(29), செல்வம் (28) , பாட்ஷா(25) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.