Sun. Oct 6th, 2024

கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக பசுமை நுகர்வோர் தினம் கடைபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக பசுமை நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வினை தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்றார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா உலக பசுமை நுகர்வோர் தினம் குறித்து பேசியதாவது,

பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. செப்டம்பர் 28ஐ பசுமை நுகர்வோர் தினமாக கொண்டாடி வருகிறது. மீண்டும் எளிதில் புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களைப் பயன்படுத்தித்தான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்.

ஆனால், உலகமோ தற்போது மாபெரும் குப்பைமேடாக மாறி வருகிறது, பூமி வேகமாக வெப்பமடைந்து வருகிறது என்று புள்ளிவிவரங்களை அடுக்குவதைவிட இயற்கையைப் பாதுகாக்க நம்மால் முடிந்த செயல்களை உடனே செய்வது, பூமி சீர்கெடும் விகிதத்தை குறைக்க உதவும்.

அதற்கு அனைவரும் பசுமை நுகர்வோராய் மாறுவோம். முடிந்த வரை பிளாஸ்டிக்பைகளை தண்ணீர் பாக்கெட்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க ஒவ்வொருவரும் துணிப்பைகளை பயன்படுத்த தனக்குள்ளே உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, செல்விஜாய் தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமானுல்லா புதுக்கோட்டை