Sun. Oct 6th, 2024

ஆசிரியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளை முறைமைப்படுத்த வேண்டும் – புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு!

புதுக்கோட்டை (மச்சுவாடி) அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் மீது மாணவரை நெறிப்படுத்தியமைக்காக மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப்பெறவும், உரிய விசாரணையின்றி ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்படும் துறை ரீதியிலான நடவடிக்கைகளை முறைமைப்படுத்த வேண்டியும் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை (மச்சுவாடி) அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் மீது மாணவரை நெறிப்படுத்தியமைக்காக மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப்பெறவும்,உரிய விசாரணையின்றி ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்படும் துறை ரீதியிலான நடவடிக்கைகளை முறைமைப்படுத்த வேண்டியும் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களில் சமூக கலாச்சார சீரழிவுக்கு உட்பட்டிருக்கும் மாணவர்களை நெறிப்படுத்துவதற்கு தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும், இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமரசமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, மாணவர்கள் சில தகாத எதிர்வினைகளில் ஈடுபடுகிறார்கள். மாணவர்களை நல்வழிப்படுத்தும் நிகழ்வுகளில், எதிர்பாராத நிலையில் மனவெழுச்சியின் காரணமாக மாணவர்கள் தம்மை தவறான செய்கைக்கு உட்படுத்திக்கொள்ளும் நிலையில், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை என்பது இயல்பானதாகிவிட்டது.

இச்செயல் கற்பித்தல் பணியோடு மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த நெறிப்படுத்துதலை செய்யும் ஆசிரியர்களுக்கு இது தேவையற்ற செயல் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எனவே வருங்கால சமூகத்திற்கு நல்ல குடிமகன்களை உருவாக்கும் ஆசிாியர்களின் செயலுக்கு இடையூறு ஏற்படா வண்ணம், இனி வருங்காலத்தில் ஒழுங்கு நடவடிக்கைகளை முறைமைப்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி மேல்நிலை வகுப்பு மாணவன் சந்தேக மரணமடைந்ததைத் தொடர்ந்து புற அழுத்தத்தின் காரணமாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தலைமையாசிரியர் சிவப்பிரகாசத்தின் தற்காலிக பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பள்ளிகளில் சமூக விரோதிகளால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கி பள்ளிகளில் அத்துமீறும் சமூக விரோதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து கற்பித்தல் பணி சுதந்திரமாக மேற்கொள்ள ஆசிாியர்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பை வழங்கிட அரசை கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகளை முறைப்படுத்திட ஆசிரியர், பெற்றோர், காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்பில் கண்காணிப்புக்குழு ஏற்படுத்தி பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு அளித்தனர்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழக தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சிநர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சங்கங்களின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அமானுல்லா புதுக்கோட்டை