Sun. Oct 6th, 2024

ரூ.2 லட்சத்து பத்தாயிரத்தில் இந்துக் கோவிலுக்கு தகர கொட்டகை அமைத்து கொடுத்த இஸ்லாமியர்!

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும்படி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் தன் சொந்த செலவில் இந்து கோவிலுக்கு ரூ.2 இலட்சத்து பத்தாயிரத்தில் தகர கொட்டகை அமைத்து கொடுத்தார்.

புதுக்கோட்டை:திருமயம் அருகே உள்ள ஓலைக்குடிப்பட்டியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் தனது சொந்த செலவில் இந்து கோவிலுக்கு ரூ.2 இலட்சத்து பத்தாயிரம் மதிப்பீட்டில் தகர கொட்டகை அமைத்து கொடுத்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சிக்குட்பட்ட ஓலைக்குடிபட்டி கிராமம்.இக்கிராமத்தில் உள்ள செல்வகணபதி பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது.இக்கோவிலில் முன்பாக பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் நின்று சாமி கும்பிட்டு வந்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் ஊராட்சி நிதியிலிருந்து தகர கொட்டகை அமைத்து தருமாறு ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் இடம் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் தனது சொந்த நிதியிலிருந்து 2 இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் செலவில் கோவில் முன்பாக மிகப்பெரிய தகரசீட் கொட்டகை அமைத்து கொடுத்தார்.

ஒரு இஸ்லாமியர் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்து கோவிலுக்கு தனது சொந்த நிதியிலிருந்து தகரசீட் கொட்டகை அமைத்து கொடுத்தது பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த ஓலைக்குடிபட்டி கிராமத்தினர் மற்றும் பொதுமக்கள் திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தரை குடும்பத்துடன் அழைத்து வந்து திறப்பு விழாவினை நடத்தினர், விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருமயம் ஊராட்சியில் தனது சொந்த செலவில் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்த முதல் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் என பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றர்,

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அமானுல்லா புதுக்கோட்டை