Sun. Oct 6th, 2024

மதுபானம் இல்லாத காரணத்தால் ஷேவிங் லோஷன் குடித்த குடிமகன்கள்? | இருவர் பலி – ஒருவர் கவலைக்கிடம் ! |

மதுபானம் இல்லாத காரணத்தால் ஷேவிங் லோஷன் குடித்த குடிமகன்கள்? இருவர் பலி – ஒருவர் கவலைக்கிடம் !

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டை பட்டனத்தை சேர்ந்த அன்வர்ராஜா (33). இவர் இரு சக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருபவர். இவருடன் ராமநாதபுரம் மாவட்ட பேய்க்கரும்பு பகுதியை சேர்ந்த அருண் பாண்டி (27), கோட்டைபட்டினம் மீனவ காலனியை சேர்ந்த அசன் மைதீன் (35) ஆகியோர் கோட்டை பட்டணத்தில் தங்கி மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் மூவரும் இரவு நேரங்களில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு, அமலில் உள்ள நிலையில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளது, இதனால் மதுபானம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த இவர்கள் ஷேவிங் செய்த பின் முகத்தில் தடவும் லோஷனை வாங்கி சென்று கோட்டைப்பட்டினம் தர்கா அருகே அமர்ந்து சோடாவுடன் கலந்து மதுவை நினைத்து அருந்தி உள்ளனர்‌..

லோஷனை அருந்திய மூன்று பேருக்கும் உடனே வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ளவர்கள், அந்த மூன்று பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி அருண் பாண்டி, அசன் மைதீன் ஆகியோர் உயிரிழந்தனர். அன்வர் ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் குறித்து கோட்டைப்பட்டினம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்…

கூடுதல் தகவல் :- தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அன்வர் ராஜாவும் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்…

நமது நிருபர்