Tue. Oct 8th, 2024

நீதிமன்ற உத்தரவையடுத்து பல கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட | HRNC அதிகாரிகள் |

செப்டம்பர் 20-2019

சென்னை வில்லிவாக்கத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இந்த இடங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி வாசிகள் கடைகள் அமைத்தும் வீடுகள் கட்டியும் பயன்படுத்தி வந்தனா். அதற்காக கோயில் தரப்பில் குறைந்த அளவில் குத்தகை முறையில் வாடகை வசூல் செய்து வந்துள்ளனர்.


இந்நிலையில் வில்லிவாக்கம் எம்பார் நாயுடு தெருவில் கண்ணம்மாள் என்பவர் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கோயிலுக்கு சொந்தமான 2550 சதுர அடி நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்ததாகவும். கடந்த 2016 ஆண்டு வரை அவர் சுமார் 8 லட்சம் ரூபாய் வரை கோயிலுக்கு பாக்கி வைத்துள்ளார்.

இதேபோல் வில்லிவாக்கம் ரெட்டி தெருவில் பாலகுமார் என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக 5824 சதுர அடி நிலத்தில் கடைகள் அமைத்து பயன்படுத்தி வந்ததும் அவரும் 24 லட்ச ரூபாய் கோயிலுக்கு பாக்கி வைத்துள்ளார். இந்த இரண்டு இடங்களையும் மீட்க இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்களை காலி செய்து கோயில் இடத்தை மீட்க நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் கவிநிதா, வருவாய் துறை அதிகாரி கலை பாண்டியன், கோயில் செயல் அதிகாரி ஜெய பிரகாஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து காவல்துறை உதவியுடன் காலி இடங்கள் உட்பட இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்தனா்.

மீட்கபட்ட இடங்களின் மதிப்பு சுமார் 7 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்…

நிருபர்
வே.சரவணன்