Mon. Oct 7th, 2024

யார் பெரியவர் என்ற வாக்குவாதம் | இருவருக்கு அரிவாள் வெட்டு | தலைமறைவான நபருக்கு வலைவீச்சு |

யார் பெரியவர் என்ற வாக்குவாதம் | இருவருக்கு அரிவாள் வெட்டு | தலைமறைவான நபருக்கு வலைவீச்சு |

ஜூலை,10 ,2019

ஏரியாவில் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் 2 வாலிபர்களை அரிவாளால் வெட்டிய கும்பலை கைது செய்ததோடு,தலைமறைவான நபரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை அயனாவரத்தை அடுத்த சபாபதி தெருவில், நேற்று முன்தினம் இரவு, வாலிபர்கள் சிலர் பேசி கொண்டிருந்தனா். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அதில், சிலர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால்  2 பேரை தாக்கிவிட்டு தப்பி சென்றனா். இதுபற்றி தகவல் அறிந்த அயனாவரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று காயங்களுடன் இருந்த 2 பேரை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தப்பி ஓடியவர்களை தேடி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்குமார் (வயது 19), சதீஷ்குமார் (வயது 19), நிவாஸ் (வயது 19), கரண் (வயது 19) மற்றும் சூளைமேட்டை சேர்ந்த சிவக்குமார் (வயது 20) ஆகிய 5 பேர் அயனாவரம் போலீசில் சரண் அடைந்தனா்.விசாரணையில், 5 பேரும் தங்கள் நண்பர்களான மணிகண்டன் (வயது 19), கிருபானந்தன் (வயது 17) ஆகியோருடன் சம்பவத்தன்று பேசிகொண்டிருந்ததாகவும், அப்போது ஏரியாவில் யார் பெரியவர் என்ற  வாக்குவாதத்தில், 2 பேரையும் தாக்கியது தெரியவந்தது.இதனை அடுத்து, சரணடைந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில்,இந்த வழக்கில் தொடர்புடைய 17 வயது சிறுவனை, கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனா். மேலும் தலைமறைவாக உள்ள வில்லிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனா்…

-நமது நிருபர்