Mon. Oct 7th, 2024

கூலித் தொழிலாளியை பைப்பால் தாக்கிய தலைமைக் காவலர் | பணியிடை நீக்கம் |

கூலித் தொழிலாளியை பைப்பால் தாக்கிய தலைமைக் காவலர் | பணியிடை நீக்கம் |

ஜூலை ,7,2019

கோயம்பேடு மார்க்கெட்டில், கூலித் தொழிலாளியை சரமாரியாக பிளாஸ்டிக் பைப்பால் தாக்கிய, தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 23).இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார்.

முருகானந்தம், நேற்று இரவு 9 மணி அளவில், கோயம்பேடு மார்க்கெட்டின் ஏழாவது கேட்டின் அருகில் நின்றபடி, தனது  தாயாரிடம் செல்போனில்  பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கோயம்பேடு போலீசார் ரோந்து வாகனத்தில் வந்து முருகானந்தத்தை அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அதற்கு முருகானந்தம் எதற்காக என்னை திட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது,ஆத்திரமடைந்த தலைமை காவலர் சுரேஷ் ,  முருகானந்தத்தை பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக தாக்கினர். முருகானந்தம் அடி தாங்க முடியாமல் சத்தம் போடுவே கூலித் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தனர். இதை பார்த்த காவலர்கள் ஓட்டம் பிடித்தனர். அருகிலிருந்த கூலித்தொழிலாளிகள், அடிபட்ட முருகானந்தத்தை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு, 500க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு, கூலித் தொழிலாளியை தாக்கிய காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்ததை அடுத்து கலைந்துச் சென்றனர்.இந்நிலையில்,  மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரி, தலைமை காவலர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

– நமது நிருபர்