Sun. Oct 6th, 2024

போதையில் ரகளையில் ஈடுபட்ட | இளைஞர்கள் மீது அமிலம் வீச்சு |

குடிபோதையில் தகராறு செய்த 8 பேர் மீது அமிலத்தை ஊற்றிய நபர் கைது.

சென்னை நெற்குன்றம் முனியப்பா நகர் மூன்றாவது தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருபவர் கன்னியப்பன் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வருகிறார். இதே வீட்டின் மூன்றாவது மாடியில் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 இளைஞர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அழகுமுத்து (38), கருப்பசாமி(32), வாஞ்சிநாதன்(18), வீரமணி(21), முருகன் (23) இவர்களுடன் மேலும் மூவர் உட்பட 8 பேரும் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டு போதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர். கன்னியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்று ஏன் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைக்கலப்பு ஏற்பட்டது இதையடுத்து 8 பேரும் சேர்ந்து கன்னியப்பன் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கன்னியப்பன் வீட்டில் வைத்திருந்த வெள்ளிப் பொருட்களுக்கு பாலீஷ் செய்யும் அமிலத்தை தண்ணீரில் கரைத்து கொண்டு வந்து 8 பேர் மீதும் ஊற்றியுள்ளார். இதில் அவர்கள் உடலில் பட்டவுடன் உடல் அரிக்க தொடங்கியது இதையடுத்து 8 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கன்னியப்பனை கோயம்பேடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்…

நமது நிருபர்