Mon. Jul 8th, 2024

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மூன்று பெண் கொள்ளையர்கள்…!!!

பல்லாவரம், மே,10…

பல்லாவரம் அடுத்த பம்மலில்.. நேற்று இரவு ஓடும் பேருந்தில் பர்தா அணிந்து பெண்களிடம் செயின் பறிக்க முயன்ற மூன்று பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரி பகுதியை சேரந்தவர் சசிகலா(37). இவர் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி செல்லும் மாநகர பேருந்தில் சென்று கொண்டிருந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா அணிந்து கொண்டு மூன்று பெண்கள், சசிகலாவை சுற்றி வளைத்தபடி நின்று கொண்டு பயணம் செய்தனர்.
அப்போது அவர்களில் ஒருவர், நைசாக சசிகலா கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை அறுக்க முயன்றனர். மற்றவர்கள் அவருக்கு காவலாக யாரும் பார்த்து விடாதபடி மறைத்துக் கொண்டு நின்றனர். இதனை எதேச்சையாக கவனித்த சசிகலா “திருடி”திருடி” என்று கத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு திரண்ட சக பயணிகள், மூன்று பெண்களையும் சூழ்ந்து கொண்டு, தர்ம அடி கொடுத்து, அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

உடனே பேருந்தை பம்மல் போலீஸ் பூத் அருகே நிறுத்திய ஓட்டுநர், மற்ற பயணிகளின் துணையுடன், கொள்ளை கும்பலை சேர்ந்த பெண்கள் மூன்று பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பிடிபட்ட பெண் கொள்ளையர்கள்
மூன்று பேரும் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பிரியா(26), சங்கரம்மா(28), அபிராமி(25)
என தெரிய வந்தது.

மேலும் இவர்கள் சென்னை நகரமெங்கும் பேருந்துகளில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பயணிகளின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்கள் பர்தா அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நமது நிருபர்…