தடகள வீராங்கனைக்கு பாராட்டுவிழா ..
மே,03-2019
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் ஆசிய தடகள போட்டியில் சாதித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து அவர்களுக்கு பாராட்டு விழா…
சென்னை: கத்தார் தலைநகர் தோகாவில் நடைப்பெற்ற 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை (திருச்சி) சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஹாங்காங்கில் நடந்த ஆசிய இளையோர் தடகள போட்டியில் தமிழக வீராங்கனை தபிதா 100 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் 2 தங்க பதக்கமும், தமிழக வீரர் மாதேஷ் 800 மீட்டர் ஒட்டத்தில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளனர். இந்த மூவருக்கும் தமிழ் நாடு தடகள சங்கம் சார்பில் சென்னை பெரிய மேட்டிலுள்ள மெட்ரோ மேனர் ஹோட்டலில் பாராட்டு விழா நடைப்பெற்றது.
மேலும் ஆசிய தடகள போட்டிகளில் வெற்றிப் பெற்று சாதனை புரிந்த கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 இலட்சமும், தபிதாவிற்கு ரூ.3 இலட்சமும், மாதேஷ்க்கு ரூ 2 இலட்சம் ரொக்க பரிசை காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்க தலைவர் அஜய் பாண்டியன் வழங்கி கெளரவித்தார்.
அது மட்டுமில்லாமல் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மூவருக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் டபிள்யு. ஐ தேவாரம், செயலாளர் லதா, மூத்த துணைத் தலைவர்கள் சி .சைலேந்திரபாபு, ஆர்.சுதாகர், துணைத் தலைவர் ஷைனி வில்சன் ஆகியோர் கலந்து கொண்டு சாதனை படைத்தவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்தினர். மேலும் இவ்விழாவில் கோமதி மாரிமுத்துவின் தாயார் ராஜாத்தி அவர்களும் கலந்து கொண்டார்.
நமது நிருபர்