சுவர் இடிந்து விழுந்து வட மாநில இளைஞர் பலி
கட்டிட இடிப்பு பணியின் போது சுவர் இடிந்து விழுந்து வட மாநில நபர் பலி..
ஏப்ரல் 5, 2019
சென்னை,செனாய் நகர் அருணாச்சலம் 4வது தெருவில் உள்ள ஹரி வாசன் என்பவருக்குச் சொந்தமான வீட்டை இடித்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் பத்துக்கும் மேற்பட்ட வடமாநில வாலிபர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வீட்டின் மேற்பகுதியில் உள்ள சுமார் 8 அடி உயரமுள்ள ஒரு சுவற்றை மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அலாவுதீன் ஷேக் (34) என்பவர் இடித்து கொண்டிருந்தார்.
அப்பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் உயரமான சுவற்றை மேற்பகுதியிலிருந்து இடிக்காமல் முதலில் அடித்தளத்தை இடித்துள்ளார். இதில் அதிர்வடைந்த சுவரானது அலாவுதீன் ஷேக் மீது இடிந்து விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த அலாவுதீன் சேக்கை.. சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலே அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலிசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் ஹரி வாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்…
நமது நிருபர்